Sunday, August 11, 2013

ரசிகரின் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - நடிகர் விஜய்

ரசிகரின் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது - நடிகர் விஜய்தலைவா படம் வெளியாகாததால் விரக்தியில் தூக்குப் போட்டு எனது ரசிகர் விஷ்ணு தற்கொலை செய்து கொண்ட செயல் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனது ரசிகர்கள் என் மீது உண்மையான அன்பு வைத்திருப்பார்களானால் இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

கோவை, துடியலூரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தவர். 

விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய், அமலாபால் நடித்த தலைவா படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாமல் போனது. தலைவா படத்தைப் பார்க்க ஆவலாய் இருந்த விஷ்ணு இதனால் ஏமாற்றத்திற்குள்ளானார். 

நண்பர்களிடம் வருத்தமாகப் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மிகவும் கவலையுடன் இருந்தார். 

இதுப்பற்றி எங்களிடமும் சொல்லி வருத்தப்பட்டார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என்றனர். 

துடியலூர் போலீசார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுவின் குடும்பம் மிக ஏழ்மையானது. கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர் அவரது பெற்றோர். 

இந்த நிலையில் விஷ்ணுவின் மறைவுக்கு நடிகர் விஜய் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

எனது ரசிகர்கள் அனைவரும் கட்டுப்பாடு காக்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும். தலைவா படம் விரைவில் வெளியாகும். விஷ்ணுவின் மரணத்தால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனது ரசிகர்கள் அனைவரும் எனது சகோதரர்கள். எனது வாழ்க்கையில் இந்த நாள் மிகவும் சோகமான நாள். 

விஷ்ணுவின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. நீங்கள் என்னை உண்மையாக விரும்புவீர்களானால், நான் உங்களை நேசிப்பது உண்மையானால், யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.

No comments:

Post a Comment