Tuesday, March 22, 2011

இளைய எம்.ஜி.ஆர் விஜய்?

இளைய எம்.ஜி.ஆர் விஜய்? 

             விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பரபரப்பு கிளம்பியதுமே அடுத்த எம்.ஜி.ஆர் ஆக நினைக்கிறாரா விஜய் என்று கேள்விகள் எழும்பின. அதன் பிறகு ரசிகர் மன்ற போஸ்டர்களில் இளைய எம்.ஜி.ஆர் விஜய் என்று எழுதப்பட்டது. ஏற்கெனவே கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் இருக்க இது என்னப்பா புதுசா இருக்கே என்று நினைக்க, சமீபத்திய விழா ஒன்றில் அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர். சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் விஜய் நடிக்கிறார். விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை.  
’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லக் கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    எம்.ஜி.ஆர் போல விஜய் அரசியலுக்கு வருவார். யாரும் நடிக்க வரும்போதே அரசியல் ஆசையோடு வருவதில்லை. காலம் அவர்களை கட்டாயப் படுத்துகிறது. விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார். அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குனர் சீமான் பேசுகையில் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய்.   எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம். எனக்கான சுவாசத்தை நான் தான் சுவாசிக்க வேண்டும். என் தம்பி விஜய்க்கான அரசியலை அவர் தான் செய்வார். வரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.
உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.  மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் 
போராளி. 

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார். மேலும் ஒரு மனிதன் குழுபைக் குறைக்கலாமே தவிர கோபத்தைக் குறைக்ககூடாது. எங்கள் கோபம் இன்னும் அதிகமாய் வெளிப்படும் வகையில் என் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் பகலவன் படம் வெளிவரும் என்றார்.

விழாவுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் வரவில்லை...



No comments:

Post a Comment