Friday, July 22, 2011

புதிதாக ஓட்டுப்போட்டவர்களில் 50% பேர் விஜய் ரசிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

SA Chandrasekar இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அ.தி.மு.க. அணி வெற்றி பெற கடுமையாக உழைத்தீர்கள். அ.தி.மு.க. அணி அமோகமாக வெற்றி பெற்றது. விஜய் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.

சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.

விஜய் எனக்கு பிள்ளை. நீங்கள் கொடுத்த உற்சாகத்தில் தான் விஜய் இளைய தளபதியாகி உள்ளார்.

அவர் பெயரை வைத்து நீங்கள் வளரவேண்டும். மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தங்கள் பகுதியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் நீங்கள் தேர்தலில் நிற்க நான் சீட் வாங்கி தருவேன்.

இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் அரசியல் மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு வந்து அடிப்பார்கள், அந்த அளவுக்கு மக்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம்.

விஜய் இதுவரை 50 படத்தில் நடித்துவிட்டார். இன்னும் 25 படங்களிலாவது அவர் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அதனால் அவர் முழு நேர நடிகராக இருப்பார். நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். நான் நேரிடையாக ஈடுபட்டு உங்களுக்கு பலமாக இருப்பேன் என்றார்.

No comments:

Post a Comment